| என் அன்புக்குரியவளே! |
| கடைசியாக நீ |
| சொல்லிப் புலம்பிய வார்த்தை |
| "சந்தோஷம் சாமி!" |
| இப்போது சொல்! |
| புலம்பி முடித்துவிட்டாயா |
| பெண்ணே? |
| எப்படி நினைத்தாய்? |
| நானுன்னை |
| நிரந்தரமாகப் பிரிந்துவிடுவேன் |
| என்று |
| எப்படி நினைத்தாய்? |
| பைத்தியமே! |
| நமக்கிடையில் |
| நீண்டுகிடப்பது தூரமல்ல |
| நேசத்தின் |
| நீளமல்லவா? |
| எப்படி நினைத்தாய் |
| நானுன்னை |
| நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று? |
| உன்னை விட்டு |
| எத்தனை தூரம் பறந்தாலும் |
| உன் |
| நினைவுச் சிறகுகளோடுதான் |
| நான் பறந்துகொண்டிருப்பேன் என்பதை |
| நீ அறிவாயா? |
| என் |
| பாலைவெளிகளில் |
| பாலூற்றாய் வந்தவளே! |
| நீ |
| அன்போடு பேசும் |
| அந்த நிமிடங்களிலெல்லாம் |
| என் ரத்தக் குழல்களில் |
| பன்னீர் நதியின் |
| பாய்ச்சல்.... |
| என் |
| ஹார்மோன் சுரப்பிகளெல்லாம் |
| அமுதச் சுரபிகளாய் |
| ஆகியிருக்கின்றன... |
| எப்படி நினைத்தாய் |
| நானுன்னை |
| நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று? |
| நரம்புகள் அறுபட்ட யாழாய்ப் |
| பிறைநிலா கதறுவதுபோல்.... |
| இந்தப் பிள்ளை நிலாவும் |
| உன் |
| நினைவுகளில் |
| நிச்சயம் கதறிக்கொண்டுதான் இருக்கப்போகிறது! |
| என் |
| நெஞ்சை நோக்கி |
| நினைவுக் கற்களை |
| நிறுத்தாமல் வீசிக்கொண்டிருப்பவளே! |
| என் கல்நெஞ்சை |
| ஏன் கண்ணாடியாய் மாற்றினாய்? |
| உன் நினைவுக்கற்களால் |
| உடைபட்டுச் சிதறும் |
| இருதயச் சில்லுகள் ஒவ்வொன்றும் |
| என் உயிரைக் கிழிக்கின்றன... |
| நீ அறிவாயா? |
| துக்கங்களாலும் |
| தோல்விகளாலும் |
| என் |
| இருதயத்தின் அறைகள் |
| இருண்டு போகும் போதெல்லாம் |
| அங்கே |
| உன் நினைவுகளென்னும் மெழுகுவர்த்திகள்தான் |
| எரியப் போகின்றன |
| என்பதை அறிவாயா? |
| நான் |
| பாறையாய் இருந்தபோதெல்லாம் |
| பூவைப் போல் வருடிக்கொடுத்தாய்! |
| இப்போது |
| பூவாக மாறியிருக்கிறேன். |
| ஏன் |
| சொற்கள் என்னும் |
| சம்மட்டியால் அடிக்கிறாய்? |
| என் |
| மனமென்னும் |
| மரத்தடி நிழலில் |
| இதுவரை எத்தனையோ பேர் |
| இளைப்பாறிவிட்டுப் போனதுண்டு. |
| அப்போதெல்லாம் |
| ஆனந்தமாய்க் கிளைத்தேன்! |
| ஆனால் |
| நீ வந்த பிறகுதானடி |
| எங்கே வெளியேறிவிடுவாயோ |
| என்ற வேதனையிலேயே |
| பட்டுப் போகிறேன்! |
| நம் பிரிவு |
| நிரந்தரமானதென்று |
| நீயே முடிவுசெய்துவிட்டாயா? |
| எப்படிச் சொன்னாய்? |
| "இந்தப் பிரிவு |
| நிரந்தரமானது போலத் தோன்றுகிறது!" |
| அடி பேதைப் பெண்ணே! |
| முத்து போனபிறகு |
| சமுத்திரத்திற்கு ஏதம்மா |
| சரித்திரம்? |
| "மறக்க மாட்ட இல்ல?" |
| என் |
| அன்பின் மீது |
| அவ்வளவு சந்தேகமா? |
| இன்னும் நீ |
| நான் |
| "நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன்" என்று |
| நினைத்தால் |
| ஒரு வழி இருக்கிறது. |
| என் முகவரியை |
| அனுப்பி வைக்கிறேன்! |
| வந்து |
| உன் கூந்தல் பூவை |
| என் கல்லறையில் வைத்துவிட்டுப் போய்விடு..... |
Sunday, August 26, 2012
Subscribe to:
Comments (Atom)
