Saturday, September 22, 2012

மடியில் சுமந்து பாலூட்டியவளை 
"மம்மி" என்றழைக்கும்போதும், 
தமிழ்நாட்டுத் தகப்பனை 
"டாடி" என்றழைக்கும்போதும், 
செவிபொத்தி அழுகின்றாள் 
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! 
நாகரீக நாகம் தீண்டி 
நல்ல தமிழ் சாகும்போதும், 
நான்கு வரி தமிழில் பேச சிலர் 
நாக்கு நுனி நோகும்போதும், 
சினம்கொண்டு சீறுகின்றாள் 
செந்தீயாய் செந்தமிழ்த்தாய்! 
தரமான தமிழ்ப் பெயர்கள் 
தரணியிலே நூறிருக்க 
வரம் வாங்கிப் பிள்ளை பெற்று 
வடமொழியில் பெயர் வைத்தால் 
சீறாமல் என்ன செய்வாள் 
சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்! 
தமிழ்த்தேரே இங்கு தள்ளாடும்போது 
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால் 
"சீ"யெனச் சீறுகிறாள் 
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! 
"கொலைவெறி"யாய் தமிழர் நாவில் 
அலைமோதும் ஆங்கிலத்தால் 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 
தொலைந்துபோன தமிழையெண்ணி 
சிங்கமெனச் சீறுகிறாள் 
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! 
இளங்கோவும், பாரதியும் 
இனிக்க இனிக்க இறைத்த தமிழ் 
இங்கிலாந்தின் தாய்மொழியால் 
இறங்குமுகம் காணும்போது 
சிலிர்த்தெழுந்து சீறுகிறாள் 
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! 
சிங்கள நாட்டுச் சிறுமைகளும், 
கேரள நாட்டுக் கேவலமும் 
தரணியெங்கும் தமிழர்நெஞ்சில் 
தணலாகத் தகிக்கையிலே 
தமிழ்த்தாயைக் குளிர்விக்கத் 
தற்சமயம் ஏது நேரம்? 
வர்ணித்தவன் 
எல்லாம் பெண்கள் உடம்பில் 
உள்ள வேதங்களை படிக்கிறான் 
இடம் பொருள் ஏவலை மறந்து 
இவளும் கிடக்கிறாள் 
பெண்ணின் கற்பின் 
அருமையை மறந்து ...! 
கண்ட 
இடங்களிலும் முத்தக் 
கண்காட்சி காணப்படுகிறது 
அமெரிக்காவை போல...! 
ஒரு சந்திப்பில் 
கைப்பிடித்தவன் 
ஓர் இரவு கணவன் ஆகிறான் ...! 
காணும் இடமெல்லாம் 
கல்லூரி தோட்டம் 
பூக்கும் மணமெல்லாம் 
காதலர்கள் கூட்டம் 
அவர்களுக்குள் நடக்கிறதே 
இளமை ஆட்டம் 
அதனுள் தீர்த்துக் கொண்டார்கள் 
இளமைப் பசியை... 
பேருந்தில் 
புயலாக உரசல் நடக்கிறது 
பூங்காக்களில் 
மழையாகவே பொழிகிறது 
முத்தங்கள் ...! 
துப்பட்டாவால் 
தன் முகத்தை மறைத்தவள் 
மார்பகத்தை துப்பட்டாவால் 
மறைக்க மறந்தாள் 
ரசித்துக் கொண்டார்கள் 
அவளை ஏற்றிச் சென்ற 
காதலனைத் தவிர 
அனைவரும் ...! 
அன்று 
காதல் பூத்ததே 
திருமணத்துக்காகத்தான் 
இன்று 
பெரும்பாலும் காதல் பூப்பதே 
கற்பை கறையாக்கத்தான்...! 
உரசிவிட்டு 
உடம்புக்காக உறங்கிவிட்டு 
போகும் காதலைத்தான் 
பார்க்க முடிகிறது 
உடம்பை 
எதிர்பார்க்காத 
உயிர்கொண்ட காதலை 
பார்க்க முடிவதில்லையே ...!