| மடியில் சுமந்து பாலூட்டியவளை |
| "மம்மி" என்றழைக்கும்போதும், |
| தமிழ்நாட்டுத் தகப்பனை |
| "டாடி" என்றழைக்கும்போதும், |
| செவிபொத்தி அழுகின்றாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| நாகரீக நாகம் தீண்டி |
| நல்ல தமிழ் சாகும்போதும், |
| நான்கு வரி தமிழில் பேச சிலர் |
| நாக்கு நுனி நோகும்போதும், |
| சினம்கொண்டு சீறுகின்றாள் |
| செந்தீயாய் செந்தமிழ்த்தாய்! |
| தரமான தமிழ்ப் பெயர்கள் |
| தரணியிலே நூறிருக்க |
| வரம் வாங்கிப் பிள்ளை பெற்று |
| வடமொழியில் பெயர் வைத்தால் |
| சீறாமல் என்ன செய்வாள் |
| சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| தமிழ்த்தேரே இங்கு தள்ளாடும்போது |
| வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால் |
| "சீ"யெனச் சீறுகிறாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| "கொலைவெறி"யாய் தமிழர் நாவில் |
| அலைமோதும் ஆங்கிலத்தால் |
| தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் |
| தொலைந்துபோன தமிழையெண்ணி |
| சிங்கமெனச் சீறுகிறாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| இளங்கோவும், பாரதியும் |
| இனிக்க இனிக்க இறைத்த தமிழ் |
| இங்கிலாந்தின் தாய்மொழியால் |
| இறங்குமுகம் காணும்போது |
| சிலிர்த்தெழுந்து சீறுகிறாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| சிங்கள நாட்டுச் சிறுமைகளும், |
| கேரள நாட்டுக் கேவலமும் |
| தரணியெங்கும் தமிழர்நெஞ்சில் |
| தணலாகத் தகிக்கையிலே |
| தமிழ்த்தாயைக் குளிர்விக்கத் |
| தற்சமயம் ஏது நேரம்? |
Saturday, September 22, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment